மருகி மருகிப் போறவளே!!
சத்தியமா! உன்னமட்டும்
சாகும் வரை மறக்கமாட்டேன்
சந்தேகம் ஏதுமுன்னா
சாமிகிட்ட கேட்டுப் பாரு.
பால்வாடி நீ படிக்க - உன்
பைக்கட்ட நான் தூக்கி
பத்திரமா விட்டு வந்த
பகல் பொழுது மறக்கலடி!!!
சித்திரை பொருட்க்காச்சியில்
சின்ன சின்ன சொப்பு கேட்டு உங்கம்மா
சேலைய இழுத்துகிட்டு நீ நிக்க
சீக்கிரமா ஓடிப்போயி
சேர்த்துவச்ச சில்லறையில் நீ
பார்த்து வச்ச சொப்பு வாங்கி பரிசா தந்த
சுக நிமிஷம் மறக்கலடி.
ஒரு மணி வாடகைக்கு
ஒத்தரூவா சைக்கிள் எடுத்து
பக்குவமா உன்னவச்சு
ஓட்ட பழக்கிவிட்ட
ஒரு மணியும் மறக்கலடி.
ஓடி விளையாட உன்
ஒருகாலு சுளுக்கிவிட
உசுரே போறதுபோல்
ஓயாம நீ அழுக
அழுங்காம தூக்கிவந்து
அப்படியே வீடு சேர்த்த
அந்த நொடியும் மறக்கலடி.
சந்தைக்கு போகையில
சரஞ்சரமா வார்தவீசி
சங்கீதமா நீ பேச
சாக்கு பைக்குள்ள
சத்தமில்லாம நான்
சேர்த்த வார்த்த கூட மறக்கலடி.
என் ஒரு விரல நீ பிடிச்சு
ஊரெல்லாம் ரவுண்டடிச்சு
ஓயாம கத பேசி
கடந்துவந்த தெருவெல்லாம்
கடைசி வரை மறக்கலடி.
முடியாம நான் கெடக்க
தனியாக நீ வந்து
முல்லைப்பூ கையால
தகதகன்னு தடவி விட்ட
தைல விரலோட
தடம் இன்னும் மறக்கலடி.
உன் கையால் சோறாக்கி
உன் வீட்டு மாடியில
ஊருக்கு தெரியாம
ஒன்னா உட்கார்ந்து
ஊட்டிவிட்ட நிலாச் சோறின்
நிறமின்னும் மறக்கலடி.
உசுரோடு உறஞ்சுபோன
உன்னோட நெனப்ப மட்டும்
ஒவ்வொன்னா நெனச்சு பார்க்க
ஒரு சென்மம் பத்தாது
உடனே மறக்கச் சொன்னா
உசுர் மட்டும் ஒட்டாது...