Wednesday, February 24, 2010

இது காதல் கடிதம் அல்ல...(2)


கடந்த கவிதை கடிதத்தை கசக்கி 
காயபடுத்தாமல் கயல்விழி வழியே கவர்ந்து
இதய துடிப்போடு இணைத்திருப்பாய்  என நம்புகிறேன்.
இனி ....

அது காற்று மழை வாசம் பூசிக்கொண்டு
குறைந்த பச்ச குளிர் விற்ற காலம்.


காலையில் பறித்த மல்லிகை - பூ;
மாலை வரை மாறிவிடாமல் இருக்க பூக்காரி
அடிக்கடி அள்ளி தெளிக்கும் தண்ணீராய்
வெறும் சாரலை மட்டும்
சமைத்து கொண்டிருந்தது வானம்.


கல்லூரியில் கணித பாடம் கடினமோ என்னவோ
கல்லுரி வாசல் விட்டு வருகிறதொரு
வாடா  மல்லி வாடிய முகத்தோடு.


கவிதைக்காக காத்திருந்த காகிதம் போல் - உன்
வருகைக்காக காத்திருந்த வான் மகன்
வரி வரியாய்  எழுதுகிறான் மழை துளி மை கொண்டு
மங்கை இவள் முகம் கண்டு.


மழைத்துளிகள் உன்னை பங்கு போட்டு கொண்டன.
சில துளிகள் உன்னை தரிசித்த
தருனத்தொடு தரையில் விழுந்து
தற்கொலை செய்து  கொண்டன.


சில உன் சுவாசம் தீண்டி
சுகம் பெற்றன.


சில கார்குழல் கவ்வி
கடந்து போயின.


சில தாங்க அங்கமெல்லாம் தவழ்ந்து
சுடிதார் துணியில் இடம் பிடித்து இறந்து போயின.


உன் சுடிதார் வரைந்த மொட்டுக்கள் எல்லாம்
பொசுக்கென பூத்துவிட நீ மட்டு மார்பில் தவழ்ந்த
மயில் நிற துப்பட்டாவில் மறைந்து கொண்டாய்.


பூமியில் பூத்த பூவொன்று புத்திமாறி மொட்டாய்
 முகம் மூடிய அதிசயம் அங்கு அரங்கேறியது.


வேகமாய் ஓடிவந்து பூமி பெண் விசாலமாய்
விரித்து பிடித்திருந்த ஒரு மர குடைக்குள்
மருகி குறுகி நின்று கொண்டாய்.


ஓடி ஒழிந்தது நிலவோ என்று வானில் மின்னல் வெட்டி
தொலைந்து போன நிலவை மின்னல் டார்ச் அடித்து
தேடி தேடி வானம்  கிழித்து  போனது மின்னல்.

மீண்டும் மலர்ந்தது உன் மலர் முகம்.


பனி நனைத்த ரோஜாவில்  பனியை மட்டும்
கடத்தி போகும் காற்றாய் ஒரு
கருப்பு நிற கைகுட்டையால் மழை துளிகளை
மறைத்துவிட்டாய்.


காதலை காட்டிகொடுக்கவே படைக்க பட்ட
தோழமை தொண்டர்களில் உன்
தோழியும் ஒருத்தி போல
உன்னை மட்டும் வாசித்துகொண்டிருந்த
என்னை படித்து உன் காதில் ஏதோ ஒப்பித்து
ஒழிந்து கொண்டால்.


காற்றில் ஆடிய நாணல் நிதானமாய்
நிலைகொள்வதுபோல் நீயும்  விழி  நிறுத்தி
மொழி மாற்றி ஒரு பார்வை பகிர்ந்தாய்.
ஒரு நீல மின்னல் நீண்டுவந்து இதயம் இடித்து போனது.


இதயத்தில் படபடத்த பட்டாம்பூச்சி
இப்போது இமைகளையும் பற்றி கொண்டது.


வழி குழிஎல்லாம் மழை துளி நிரப்ப மனமோ
உன் மனகுழி தேடி நிரம்பி வழிந்தது.


தொண்டர்களுக்கு நடுவே சில
குண்டர்களும் இருப்பார்கள் தானே - உன்
இன்னொரு தோழி ஒருத்தி குடையோடு வந்து
குடைக்குள் வரச்சொல்லி வாதாடினாள்.


நீ குதித்து ஓடி குடைக்குள் நுழைகையில்
குடைக்கம்பி ஒன்று உன்னை செல்லமாய்
குட்டி வைத்து வராதே என்றது.


நீ குடையை  கோபித்து கொண்டு முகம் சுழிக்கயில்
குழர்கற்று ஒன்று சுழன்று அடித்து  உன்
கார்குழல் இரண்டை கடன் வாங்கி போனது.

கொஞ்ச நேரத்தில் உன்னை குட்டிவிட்ட
குற்றத்திற்காய் எட்டு கண்களிலும்
சொட்டு சொட்டாய் ஈரம் வைத்து கொண்டது  குடை.

பணி முடிந்ததும் பத்திரமாய் கூடு சேரும்
குருவிபோல் குடைக்குள் கூடி குடி போனாய்.

கடத்த பட்டது என் இதயம்.


நம்மை சுற்றி வானவில் வளையம் போட்டு
காதல்  அதில்  ஊஞ்சல் கட்டி ஆடியது...(தொடரும்...)                                                            

Wednesday, February 17, 2010

இது காதல் கடிதம் அல்ல...(1)


(கொஞ்சம் நீளமான கவிதை...)
சிலந்தி கூடாய் சிக்கலாய் கிடந்த
இதய கூட்டின் பூட்டு திறந்து
குடிவந்து குத்து விளக்கேற்றி
நித்தம் வந்து சுத்தம் செய்து
சுகமாக்கி வைத்தவள் நீ...

கனவில் புகுந்து குழந்தை  குட்டிகளோடு
குடித்தனம் நடத்துபவள் நீ..
இது உனக்கு எழுத்தும் காதல் கடிதமோ;
வாடகை வசூலிக்கவேண்டி விண்ணப்ப கடிதோமோ  இல்லை...

நீ என் வாழ்வுக்குள் வந்து விட்டதை
வாசிக்கும்
நேசிக்கும்
யாசிக்கும்
சுவாசிக்கும் கடிதம்.

உன் முதல் தரிசனம்...
புரிதலுக்கு தயாராகாத புத்தியை - சிறு 
புன்னகை   பூத்து என்னை புரட்டி போட்ட
புனித காலம்...

நத்தையின் வித்தை கற்ற
மாநகரா(த) பேருந்து அது.

தெரு கூத்தாடிகளின் வித்தையை
வேடிக்கை பார்த்து காது மறத்து போன
புதுமை பெண் ஒருத்தின் கையில்...

பாலுக்காகவோ; ஆளுக்காகவோ
பசிக்காகவோ; ஸ்பரிசத்திற்காகவோ
வீம்புக்காகவோ; விதிக்காகவோ 
வீரியம் குறையாமல் - அப்போது 
அவளுக்கு தெரிந்த ஒரே
மொழியான விசும்பலோடு 
கதறி கதறி அழுகை விற்று கொண்டிருந்தாள்,
உன்னை போலவே ஒரு குட்டி தேவதை.

கனவில் கண்ட கடவுள் போல் காட்சி தந்து
பட்டாம்பூச்சி கண்காட்டி;
பால் நிலவின் பாவம் காட்டி;
படுத்துறங்கும் பனித்துளியின் ஸ்பரிசம் காட்டி;
பகலை இரவாக்கி நித்திரை - இன்றி
நிஜத்தை கனவாக்கி
புகழுக்கு அடங்காத புயலை ஒரு
பூ வந்து புன்னகை தொடுத்து
பூமிக்குள் புதைத்துவிட்டு போவது போல்
உன் குறிஞ்சி சிரிப்பால்
வாங்கியே விட்டாய் அவள் விற்று வந்த அழுகையை ; 
நிறுத்தியே விட்டாய் அவள் கண்ணத்தில்
நீந்தி நீண்டு வந்த நீர்துளியை.

ஓய்ந்தது ஏன்னவோ மழலை
உனர்ந்ததேன்னவோ மழயை.

அவள் அந்த அற்புதங்களை அனுபவித்து - அடுத்த
அழுகைக்கு ஆயத்தம் ஆகும்முன்
அவிழ்த்து விட்டாய் அடுத்த அதிரடியை.

காற்று மயிலிறகை கவனமாய் கையாண்டு - உன்
கார்கூந்தல் தேடி இறகை இறக்குவதுபோல் அவள்
இடையயை இதமாய் பற்றி உன் மல்லிகை மடிக்குள்
மறைத்து கொண்டாய் மேகங்களுக்கிடையே
பதுங்கிய பால்நிலவாய் அவள்.



நீ எதற்க்கோ ஆயத்தமாகிறாய்
அவள் எதையொ எதிர்கொள்ள ஆயத்தமாகிறாள்.

காரியத்தின் கண்ணீர் நனைத்த மீதியை
வீரியத்தின் வியர்வையால்  அவளை  நனைத்திருந்தாள்.


கைகளை கைக்குட்டையாக்கி
நெற்றி ஒற்றி வியர்வை விலக்கினாய் .

வண்ணம் வற்றி போன
செம்மண் இதழ் குவித்து கொளுத்தி எடுத்த
கொடை வெயிலின் சூட்டை சுளித்து வைத்த
சுண்டுஇதழால் சுகமாய் இழுத்து சுவசத்தில் கலந்து
சொடுக்கு பொழுதில் சமைத்து வெளிகொணர்ந்தாய்   
வினொத தென்றல் ஒன்றை.

குவித்த இதழ் குவித்தபடி இருக்க
குளிரூட்டினாய் குழந்தை அவளை.

செயற்கை குளிரூட்டி தெரியும் - இந்த
இயற்கை குளிரூட்டி கண்டு வியப்பில் நான்.

அப்படியொரு தென்றலின் முதல்
பிரசவத்தை பருகிய உலகின் முதல்
குழந்தை அவள்.

ஏது!! இது இப்படியெ போனால்
பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
புலம்பெயர்ந்து உன்
வீட்டு விருந்துக்கு வந்துவிடுமடி  ஜாக்கிரதை .


சிறுமி அவள் சிரித்து, சிரித்து
சிலிர்த்து , சிலிர்த்து சின்னாபின்னமாகி;
பனிக்கட்டியாய் உறைந்து போனால்.

இறுதியாய் அவளின் மைக்ரொ உதட்டில்
ஹய்க்ரொ முத்தமிட்டு மொத்தமாய்
மூர்ச்சையாக்கினாய் ;
அவளுக்கு அழுகை அன்னியமானது
அவளின் அதரம் புன்னியமானது.


அத்தோடு விட்டாய நீ…
அண்ணம் அவளை அள்ளியேடுத்து - உன்
மார்பென்னும் மந்தார
கூட்டுக்குள் குழிதொண்டி புதைத்துகொண்டாய்.

அவள்
நிஜத்தை கடந்து
நினைவுகளை துறந்து
நித்திரைக்குள் நீண்டு போனாள்.

அதை கண்ட கனத்திலே நானும் காணாமல் போனேன் ….(தொடரும்…)


                                                                                                                                                  

Sunday, February 14, 2010

காதல் பாவி..

வேர்விட்டு விதை முட்ட முளைத்து
விரைவாய் ஒரு காதல்.


விதியோடு விளையாடும் விடலைகள் தொட்டு ஆடும்
தொடர் வண்டி காதல்.


படிக்க துடிக்க வேண்டிய மனதில் காதல்
நடிக்க துடிக்கும் ஒரு காதல்.


காதல் கடிக்க, துடிக்க வடிக்கின்ற கண்நீரொடு
வாடும் ஒரு காதல்.


இசை பெட்டி இரைச்சலில் அவள் பெயர் மட்டும்
இன்னிசையாய் ஒலிக்கும் ஒரு காதல்.


கடற்கரை காற்றோடு காதல் காற்றை கலந்து
கடலை கொறிக்கும் ஒரு காதல்.


கடல் அலை ஓசையோடு முத்தம் சொல்லி
காதல் பாஷையின் கரைதொடும் ஒரு காதல்.


இணையத்தில் இணைந்து இதயம் தொலைத்து
வாழ்வை தேடும் ஒரு காதல்.


கடற்கரை மணலாய் பலர் பார்வை மிதிபட வேட்கம் விற்று
விரசம் வாங்கி சரசம் பழகும் ஒரு காதல்.


திருமணத்தில் தீராது திசைகொன்றாய்
திருடி திரியும் ஒரு காதல்.


தேவாலய திருப்படியில் தேவதை வேண்டி
கண்நேந்தி காத்திருக்கும் ஒரு காதல்.


சதி மத சாக்கடையில் சாஸ்திரமும்  சமையத்தில்
சந்தேகமும்  பார்த்து சாகும் ஒரு காதல்.


விலை மகளில் விலை கேட்டு விடியும் முன்
வெறுத்து போகும் காதல்.


ஒடிக்க படுகிற ஒவ்வொரு ரோஜாவிலும்
முறிக்கப் படுகிற ஒரு காதல்.


வாழ்த்து அட்டைக்கு வெட்டப்பட்ட மரங்களின்
ஓலம் ஒலிக்கும் ஒரு காதல்.




இந்த காதல் சாம்ராஜியத்தின்
பாசம் பறைசாற்ற
பாவியாகிறது மரங்களும்,
மலர்களும் சில
மணங்களும்...




                                                                                                




                                                            

Friday, February 12, 2010

பாண்டியும் புலி பாண்டியும்...

வா மாப்பள என்னடா இந்த பக்கம்?? ஒன்னும் இல்லடா பாண்டி... சித்தி வீட்டுக்கு வந்தேன் அப்டியே உன்னையும் பாக்கலாம்னுதான்.'ஒ' அப்டியா சரி வா டீ சாப்டலாம்.

ஆமா பாண்டி என்னடா உன் கழுத்துல என்னவொ தொங்குது 'ஒ'…இதுவா இது ஒரு பெரிய கத இன்னைகி மட்டும் இத பத்தி கேக்குற 124 வது ஆளு நீ தாண்டா.அட பார்ரா ம்ம்ம்… கதைய சொல்லு கேட்போம்.பாண்டியும் புலி


நேத்து காலைல காட்டுபக்கம் வாக்கிங் போய்கிட்டு இருந்தேனா…அப்போ ஒரு பொதருகுள்ள யாரொ அழுகுற மாதிரி சத்தம் கேட்டுச்சு யாருனு பக்கத்துல போய் பார்த்தா ஒரு புலி 'ஓ'…னு அழுதுகிட்டு இருக்கு.நான் பக்கத்துல போய்க்கேட்டேன் புலி புலி ஏன் புலி அழுகுறனு…. டேய் அப்டியே நிறுத்து. இந்த கதையெல்லாம் எவனாவது இளிச்சவாயங்கிட்ட போய் சொல்லு (அதான் உன்கிட்ட சொல்றேன்..)புலி அழுதுச்சாம் இவரு போயி பேசுனாறாம் போடா எலெய் போடா.

டேய் நம்பளனா... இந்தா, இது நான் நம்ம மாப்ள வசந்துகிட்ட மிருக பாஷய் கற்று கொள்வது எப்படி?னு ஆறுமாச டியுசென் கோர்ஸ் படிச்ச சர்டிபிகேட்டு டா ஆறெ மாசத்துல எல்லா மிருக பாஷயும் கத்து கொடுத்துடாப்ல நம்ம வசந்து. ஓ..அப்டியா…ம்ம்ம்…மேல சொல்லு.ம்ம்ம்….எதுல விட்டேன். இதுவெரயா (ஆரம்பத்துல இருந்து விட்டுகிட்டுதான இருக்க) புலிகிட்ட பேசுனதுல விட்டடா.

...ம்ம்ம்ம்...அதுக்கு புலி சொல்லுச்சு நேத்து ஒரு காட்டேறும கால கடிக்கும் போது சொத்தயா இருந்த கடவா பல்லுல எலும்பு குத்திருச்சு ராத்திரி முழுசும் தூக்கமே இல்ல வலி உயிர் போகுது மானமுள்ள பரம்பர எங்க பரம்பர… உயிர விட மானம்தே பேருசுனு தற்கொல பன்னிக்க இங்க வந்தேனு சொல்லுச்சு, எனக்கு கண்னு கலங்கிருச்சு.(எனக்கு கண்ணு அடைக்குதுடா...) அட அறிவு கெட்ட புலி இதுகாகவா சாகப்போற எனக்கு விவெக் வைத்தியம் தெரியும் அத வச்சு உன்ன காப்பாத்திருவேன்னு சொன்னென். டேய் நிறுத்து அது என்ன விவெக் வைதியம்?? அதாண்டா ஒரு படத்துல விவெக் ஒரெ அரைல நாட்டாம பல்ல கழட்டி கைல குடுத்துருவாரு அதுக்கு நாட்டாமை அவர விட்டுட்டு எடத்த மட்டும் காலி பன்னிருவாரெ அந்த வைதியம்டா.(பயவுள்ள ஒருதன் மாட்டுனா இந்த ஓட்டு ஓட்ரானெ)

ஓ…அது!!ம்ம்ம்..சொல்லு…ம்ம்ம்…அந்த வைத்தியத்த பத்தி விளக்கமா எடுட்த்து சொன்னென் புலி சுத்தி முத்தி பார்த்துட்டு ம்ம்..சரினுச்சு. விட்டேன் பொளெர்னு ஒரு அர பல்லு துண்டா போயி விழுந்துருச்சு புலி கொஞ்சநேரம் கழிச்சு ''அஹா வலி இருந்த எடம் தெரியாம போச்சே ''னு சொல்லிட்டு கட்டிபுடிச்சு கதறி அழுது நன்றி சொல்லிட்டு போய்ருச்சு. நம்பவே முடியலடா…

ம்ம்..இப்டிதா எங்க தாத்தா புலி அடிச்சேனு சொல்லும்பொது யாரும் நம்பளயாம்.நீங்களும் இப்டி சொல்லுவீங்கனு தெரிஞ்சுதான் அந்த பல்ல தேடி எடுத்து இப்படி டாலரா பொட்டு கிட்டேன் இங்க பாரு...

அட பார்ரா டி.வி ல தோனியும் சூர்யாவும் புலிய காப்பாதனும் புலிய காப்பாதனும் சும்மா சொல்றாங்க நீ சத்தம் இல்லாம ஒரு புலிய காப்பாத்திட்டு இப்டி ஒன்னுமே செய்யாத மாதிரி இருக்கியெடா…சே..நெனச்சா புள்ளரிக்குதுடா.ஆமா இந்த மீடியா உன்ன இன்னும்மா கண்டுக்காம இருக்காங்க. நான் போயி பிபிசி ரிப்போட்டர உடனெ வரசொல்றெண்டா. அதுக்கு முன்னாடி லட்சுமிபுரத்துக்கு போயி உனக்கு மிருக பாஷ சொல்லிகுடுத்த வசந்த கொஞ்சம் பாராட்டனும் பார்த்துட்டு வர்றென்டா புலிபாண்டி…அப்பறம் சந்திப்போம்… (கனவு கலஞ்சு முழிச்சு பார்த்து நல்லவேலை கனவுதான்…ஸ்ஸ்ஸ்ஸப்பா….)

Wednesday, February 3, 2010

விட்டு...விட்டு...விட்டு...

கனவு  சுமந்த காகிதம் விட்டு
காற்றை சுமந்த தேகம் விட்டு
காதல் சுமந்த மோகம் விட்டு .
கண்ணிர்  சுமந்த சோகம் விட்டு
கருமை சுமந்த காகம் விட்டு .
இளமை சுமந்த வேகம் விட்டு.
இசையை சுமந்த ராகம் விட்டு
விரகம் சுமந்த தாகம் விட்டு.
வயலை சுமந்த போகம் விட்டு
தண்ணீர் சுமந்த மேகம் விட்டு .
நஞ்சு சுமந்த நாகம் விட்டு
ரத்தம் சுமந்த ரணம் விட்டு
மொத்தம் சுமந்த பணம் விட்டு


வஞ்சகனின் மணம் விட்டு
வரி புலின் வனம் விட்டு
குடிசையின் ஓலம் விட்டு
குயிலின் கானம் விட்டு
தங்கத்தின் தனம் விட்டு
தள்ளாடும்  பானம் விட்டு
தெரு நெடுக சாணம் விட்டு
திக்கு தெரியா வானம் விட்டு
தேடி அலைந்த பூனம் விட்டு
தேடாத நாணம் வீட்டு
தெரியாத மானம் விட்டு
திகட்டாத தேன் விட்டு
தெவிட்டாத  மழலை விட்டு
தாளாத துயரம் விட்டு
தணியாத கோபம் விட்டு
அர்த்தம் தராத பாட்டை விட்டு
ரத்தம் சொட்டும் செய்தி விட்டு
முத்தம் சொட்டும் காதல் விட்டு.
சிரிப்பை  தராத சீரியல் விட்டு
வாசம் தராத வண்ணம் விட்டு.
நேசம் தராத உறவை விட்டு
பாசம் தராத பிரிவை விட்டு
தேசம் தராத தியாகம் விட்டு
யாசம் தராத நினைவை விட்டு
பாவம் பறந்து போனது பாமரனின் ஆவி...

Tuesday, February 2, 2010

லவ்வாட்டம்...



கண்னடைத்ததும் கபடி ஆடிவிட்டு போகும் இரவு 
இப்போது நொடிகளில் நொண்டியடித்து நிற்கிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
ஒரெ ஓட்டமாய் ஓடிப்போன பொழுது 
இப்பொது ஒரு ஓரமாய் உட்கார்ந்து பரமபதம் ஆடுகிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
கூடை பந்தாய் கைவிட்டு போகாத இதயம் 
இப்போது இறகு பந்தாய் இங்கும் அங்கும் அலைபாய்கிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
கில்லி கட்டையாய் சீறிபாய்ந்த சிந்தனை 
இப்போது கொள்ளி கட்டையாய் கொழுந்துவிட்டு எரிக்கிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
பட்டாம்பூசியாய் பரபரத்த பசி 
இப்போது கண்னாம்பூசி காட்டி காணாமல் ஒழிகிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்
ஆடுபுலி ஆட்டம் ஆடி ஆர்பரித்த ஆளை 
இப்போது பல்லாங்குழி பள்ளத்தில் பக்குவமாய் சிக்க விடுகிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
பரபரப்பாய் பந்தாடிய வயது 
இப்போது கார்கூந்தல் காட்டி பம்பரமாய் சுட்றுகிறது கேட்டால் 
யாருக்கும் யாருக்கோ காதலாம்.
கடைசியாய் யாருக்கு காதல் என்று காதலிடம் கேட்டால் 
அவனுக்கும் அவளுக்கும் காதல் என்று 
விடுகதை விளையாடுகிறது காதல்.                                                                      



Related Posts with Thumbnails